முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாடுகளை வரவேற்க ஒரு வாயில் @ அண்டனூர் சுரா

புதுக்கோட்டை நகரம் நேரான வீதிகளை மட்டும் கொண்டதல்ல, சந்தைக்கும் பெயர்போன ஊர்.  சந்தையோடு தொடர்புடைய இரண்டு பேட்டைகள் புதுக்கோட்டையில் உண்டு. ஒன்று வண்டிப்பேட்டை, மற்றொன்று சந்தைப்பேட்டை. வண்டிப்பேட்டை மச்சுவாடியிலும் சந்தைப்பேட்டை நகரத்திற்கு மேற்கிலும் உள்ளன.

சந்தைபேட்டையில்தான் மன்னராட்சி காலம் முதல் இன்று வரை  மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது.  புதுக்கோட்டைக்கும் அருகிலுள்ள திருச்சிராப்பள்ளியில் இரண்டு மாட்டுச் சந்தைகள் நடந்திருக்கின்றன. ஒன்று கிழட்டு மாட்டுச் சந்தை, மற்றொன்று உழவு மாட்டுச் சந்தை. இவ்விரு சந்தைகளும் தீண்டாமையின் வடிவங்கள். சாதியின் பெயரால் ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் தான் வளர்க்கும் மாடுகளை கிழட்டு மாட்டுச் சந்தையில்தான் விற்கவும் வாங்கவும் முடியும் என்கிற நிலை இருந்தது. இந்த இரண்டு மாட்டுச் சந்தைகள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதப் பொருளாகி கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில்  இரண்டு பாகுபாட்டுச் சந்தைகள் ஒழிக்கப்பட்டு ஒரே சந்தையானது. இந்த விவாதம் கலைஞர் சட்டப் பேரவை உரையில் இடம்பெற்றுள்ளது. இப்படி திருச்சியில் இருவேறு மாட்டுச் சந்தைகள் நடைபெற்று வந்த காலத்தில் மாட்டின் பெயரால்  பாகுபாடு காட்டாமல் ஒரே மாட்டுச் சந்தையாக இயங்கிய பெருமை புதுக்கோட்டை மாட்டுச் சந்தைக்கு உண்டு. மாட்டுச் சந்தை நடைபெறும் இடம் அன்றும் இன்றும் சந்தைப்பேட்டை என்கிற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை சமஸ்தான கால சந்தையின்போது சந்தைக்கு வரும் மாடுகள் தண்ணீரில்லாமல் தவித்து மயக்கமுற்று விழுந்து இறந்திருக்கின்றன.  இந்த உயிரிழப்பைத் தவிர்க்க முடியாமல் அன்றைய மக்கள் கையறு நிலையில் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் திருமயம் ராமச்சந்திரபுரம் தி.நா.நாச்சியப்ப செட்டியார் அவர்கள்  மாடுகளின் தாகத்தைத் தணிக்க முன்வந்தார்.  சந்தைக்கும் வெளியே பெரிய ஒரு  மாட்டுத் தொட்டிக் கட்டி, அதில் தண்ணீர் நிரப்பி தர்மம் என்கிற பெயரால்  மாடுகளின் தாகத்தைப் போக்கினார். இத்தொட்டியை 1912 ஆம் ஆண்டு கட்டியவர் அத்தொட்டிக்கும் அருகில் அழகான வேலைபாடுகள் கொண்ட ஒரு நுழைவு வாயிலை எழுப்பினார்.  இந்த வாயில் இன்றும் கம்பீரம் குறையாமல் நல்ல வேலைபாடுகள் கொண்ட கட்டடக் கலை அம்சத்துடன் நின்றுகொண்டிருக்கிறது.

இத்தொட்டிக்கான தண்ணீர் அருகிலுள்ள அக்சா குளத்திலிருந்து கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்கிறது. மாடுகளுக்காக கட்டியத் தொட்டி இன்று இல்லை. அந்தத் தொட்டிக்கும் அருகில் எழுப்பப்பட்ட வாயில்  பழைய கம்பீரத்துடன்  நின்றுகொண்டிருக்கிறது. அதேநேரம் வாயில் பராமரிப்பின்றி  சுற்றிலும் புதர்கள் மண்டிபோய்  காட்சியளிக்கிறது.

புதுக்கோட்டை மாநகராட்சி நிர்வாகம் சந்தைக்கு வரும் மாடுகளுக்குத் தண்ணீர்த்தொட்டி அமைத்து அதன் தாகத்தைத் தணிக்க முன்வரலாம். மேலும்  வாயிலைச் சுற்றிலுமிருக்கும் புதர்களை அப்புறப்படுத்தி புதுக்கோட்டையின் அடையாளமாக இருக்கும் இந்த வாயிலைப் பாதுகாக்கலாம். 

கோவிலுக்கு வரும் பக்தர்களை வரவேற்க எத்தனையோ நுழைவு வாயில்கள் உள்ளன. மன்னர்களை வரவேற்றும், ஆட்சியாளர்களின் நூற்றாண்டுகளை கொண்டாடும் பொருட்டும் வாயில்கள் உள்ளன. மாடுகளை வரவேற்க ஒரு வாயில் புதுக்கோட்டையில்தான்!




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திர நாள் அன்று தொடங்கப்பட்ட பத்திரிகை

புதுக்கோட்டைச் செய்தி  பத்திரிகையும் சுதந்திர விநாயகரும்                                     @அண்டனூர் சுரா        1947 ஆகஸ்ட் 15,  இந்திய மக்கள் மனதால் நிரம்பப்பெற்ற நாள். ஆம், அன்றுதான் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்நாளை உலகம் முழுமையும் வாழ்ந்த இந்தியர்கள் மகிழ்ச்சி பெருக்கெடுத்து பெரும் விழாவாகக் கொண்டாடினார்கள். தமிழகத்தில் இந்தக் கொண்டாட்டம் எந்த வகையிலும் குறைந்ததாக இல்லை. இந்நாளில் புதுக்கோட்டை தனியரசாக இருந்ததால் இங்கே சுதந்திர தினம் எப்படியாகக் கொண்டாடப்பட்டது, அந்நாளில் நடந்தேறிய விழா நிகழ்வுகள் என்ன, சமஸ்தான அரசு இந்தச் சுதந்திரத்தை எப்படியாக எதிர்கொண்டது, இந்நாளை மன்னர் கொண்டாடினாரா என்கிற கேள்விகள் நீண்ட காலமாக மக்களிடம் இருந்து வருகின்றன. இக்கேள்விக்குப் ”புதுக்கோட்டை செய்தி” எனும் மாத இதழ் பதில் சொல்கிறது. புதுக்கோட்டைச் செய்தி இந்திய சுதந்திர நாளைக்  கொண்டாடும்பொருட்டு புதுக்கோட்டை சமஸ்தானம் ‘புதுக்கோட்டைச் செய...

புதுக்கோட்டை சாதிவாரி கணக்கெடுப்பு

உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு இஸ்ரேல் நாட்டில் எடுக்கப்பட்டது. இது மக்களின் கணக்கெடுப்பாக இல்லாமல் போர்ப்படை வீரர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதாக இருந்தது. இஸ்ரேல், ஜூடாக் என இரு நாட்டினர்களுக்கு இடையேயான் போரில்   டேவிட் மன்னனைச் சாத்தான் மன்னன் தோற்கடித்தான். இப்போருக்குப் பிறகு இரு தரப்பிலும் எவ்வளவு பேர் உயிருடன் இருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டது. வீரர்களை வரிசையாக நிறுத்தி கணக்கெடுத்தார்கள். வீரர்கள் வாளை வானோக்கி உயர்த்தி உறைக்குள் சொருக வேண்டும். அப்படியாக செய்தால் மட்டும்தான் வீரர் உயிருடன் இருக்கிறார் என்று பொருள். இந்தக் கணக்கெடுப்புப் பணி ஒன்பது மாதங்கள் இருபது நாட்கள் நடைபெற்றது. முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு பாபிலோனியாவில் எடுக்கப்பட்டது. கி.மு 3 ஆம் நூற்றாண்டில்   விவசாயம், கடினத் தொழில்கள் மற்றும் இன்னும் பிற வேலைக்காக இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெர்சியன் பேரரசு,   சீனா, எகிப்திய பேரரசுகள் மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தியது. ரோமன் பேரரசு மன்னன் சர்வியஸ் டூலியஸ் என்பவன் கி.மு ஐந்தா...

உலகப் போர்களில் புதுக்கோட்டை @அண்டனூர் சுரா

உலகப் போரைத் தொடங்கி வைத்த பெருமையும் சிறுமையும் மன்னர் குடும்பத்தைச் சாரும்! ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசன் பிரான்சிஸ் பெர்டினாந்த் அவருடைய மனைவியுடன் காரில் செல்லும்பொழுது இளவரசன் செர்பியா நாட்டைச் சேர்ந்த ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த படுகொலை நடந்தேறிய நாள் ஜுன் 28, 1914. இதன் காரணமாக ஆஸ்திரியா செர்பியா மீது படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையிலிருந்த ஜெர்மனி ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக படையெடுத்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா நாடுகள் ஜெர்மனியுடன் இணைந்துகொண்டன. செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா நாடுகள் சேர்ந்துகொண்டன.        உலகில் சூரியன் மறையாத நாடு என்று பெயர்பெற்றிருந்த பிரிட்டன் தன் நாட்டைக் காப்பாற்றிக் கொள்வதோடு அதன் காலனி நாடுகளையும் காப்பாற்றியாகவேண்டிய நெருக்கடிக்கு உள்ளானது. ஆகவே இந்திய மாகாண உதவியையும் சமஸ்தான மன்னர்களின் உதவியையும் நாடியது. பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிப் பகுதியிலிருந்த இளைஞர்கள் பிரிட்டிஷ் படையில் சேர ஆர்வம் காட்டினார்கள். சமஸ்தான அரசுகள் நிதிஉதவி செய்தார்கள். அப்படியாக நிதி உதவ...