புதுக்கோட்டை திருமயம் சாலையில் டிவிஎஸ் என்றொரு பேருந்து நிறுத்தம் இருக்கிறது. புதுக்கோட்டை பொதுமக்களுக்கான பேருந்து சேவையுடன் நெருங்கிய தொடர்புகொண்ட நிறுத்தம் இது. புதுக்கோட்டையின் முதல் பேருந்து நிறுத்தம் என்றும்கூட இதைச் சொல்லலாம். பேருந்து இன்று பெண்களுக்கான இலவச ஊர்த்தியாக இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் பேருந்தில் பயணம் செய்வதற்கு விசா தேவையாக இருந்தது. மேலும் பேருந்து பயணிகளுக்குச் சிற்றுண்டி வழங்கும் முறை இருந்தது. இதெல்லாம் நடந்தது வெளிநாட்டிலல்ல, நமது புதுக்கோட்டையில்.
பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பேருந்து சேவை
பேருந்து செல்லும் நேரத்தை வைத்து மணியைக் கணித்துக்கொள்ளுமளவிற்கு பேருந்து சரியான நேரத்தில் இயக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை டி.வி.எஸ் நிறுவனம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளது. ஒரு முறை காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி புதுக்கோட்டைக்கு வருகை தந்து தங்கியிருந்திருக்கிறார். அவர் தன் உதவியாளரிடம் சொல்லி நான்கு மணிக்குத் தன்னை எழுப்பிவிடச் சொல்லி கேட்டிருக்கிறார். உதவியாளரால் நான்கு மணிக்கு எழுந்திருக்க முடியவில்லை. ஆனால் சங்கராச்சாரியார் நான்கு மணிக்கு எழுந்து உதவியாளரை எழுப்பிவிட்டிருக்கிறார். உதவியாளர் சங்கராச்சாரியாரை வியந்து பார்க்க, அவரோ நான்கு மணி டிவிஎஸ் பேருந்து சத்தம் கேட்டு எழுந்தாகச் சொல்லியிருக்கிறார்.
டி.வி.எஸ் முதல் பேருந்தின் போக்குவரத்து வழித்தடம் மதுரை - திருப்பத்தூர் - திருமயம் - புதுக்கோட்டை - பெருங்களூர்- கந்தர்வகோட்டை- தஞ்சாவூர்.
புதுக்கோட்டை சமஸ்தானத்திற்குள் பேருந்து நுழைகையில் திருமயம், கந்தர்வகோட்டை அருகிலுள்ள வளவம்பட்டி இரண்டு ஊர்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
தி இந்து - விளம்பரம்
சமஸ்தானங்களின் முதல் பேருந்து சேவை
இந்தியாவிலுள்ள சமஸ்தானங்களில் முதல் பொதுமக்களுக்கான பேருந்து சேவை தொடங்கிய பெருமை திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சாரும். 1914 ஆம் ஆண்டு நாகர்கோவிலுக்கும் திருவேந்திரத்திற்கும் ( திருவனந்தபுரம்) இடையில் இந்தப் பேருந்து சேவை இயங்கியது. திருவிதாங்கூர் சமஸ்தானம் திவான் சி.பி. இராமசாமி ஐயர் இவ்விரு நகரத்திற்கும் இடையில் சிமெண்ட் சாலை அமைத்து பேருந்து சேவையைத் தொடங்கினார். முதல் பேருந்து எட்டு இருக்கைகள் கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பயணம் செய்வதற்கு பேருந்து விசா வழங்கப்பட்டது. லெட்சுமி விலாஸ் கம்பெனி இந்த பேருந்து சேவையைத் தொடங்கியது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் குட்டி நாடார் அவர்கள்.
புதுக்கோட்டை சமஸ்தானம் தொடங்கிய பேருந்து சேவை
1929 ஆம் ஆண்டு இராமநாதபுரம் ஏ.ஆர். வைரவன் செட்டியார் புதுக்கோட்டை பஸ் சர்வீஸ் லிமிடெட் எனும் பெயரில் ஒரு பேருந்து சேவை நிறுவனத்தைத் தொடங்கினார். வங்கித் தொழிலில் ஈடுபட்டிருந்த இவர் உரூபாய் ஐம்பதாயிரம் முதலீட்டில் பத்து பங்குதாரர்கள் தலா ஐந்தாயிரம் வீதம் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் அன்றைய புதுக்கோட்டை சமஸ்தானப் பகுதிக்குள் பல பேருந்து வழித் தடங்களை உருவாக்கி, கிராமங்களைப் புதுக்கோட்டை நகரத்துடன் இணைத்தது.
புதுக்கோட்டை - ஆலங்குடி, புதுக்கோட்டை - அரிமழம், புதுக்கோட்டை - ராயவரம், புதுக்கோட்டை - வெட்டன்விடுதி- கரம்பக்குடி மார்க்கங்களில் பேருந்துகளை இயக்கியது. இந்த பேருந்து இயக்கத்திற்கு எதிராக அன்றைய மாட்டு வண்டி உரிமையாளர்கள் சங்கம் அமைத்து பேருந்து இயக்கம் கூடாதென்றும் இதனால் மாட்டு வண்டி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
தென்இந்தியாவின் முதல் பேருந்து
டிவிஎஸ் மதுரைக்கும் தஞ்சாவூருக்கும் இடையில் பேருந்து சேவை தொடங்குவதற்கும் முன்பு 1901 ஆம் ஆண்டு மன்னர் மார்த்தாண்ட பைரவர் தொண்டைமான் அவர்கள் ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து சொகுசு வாகனமான காரை இறங்குமதி செய்தார். தென்னிந்தியாவில் இறக்குமதியான முதல் கார் இது. இந்த காருக்கான பெட்ரோல் ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதன்தொடர்ச்சியாக 1904 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டிலிருந்து பேருந்து புதுக்கோட்டைக்கு இறக்குமதியானது. புதுக்கோட்டைக்கும் திருச்சிக்குமிடையில் இயங்க இந்தப் பேருந்துக்கு அனுமதி உரிமம் வழங்கப்பட்டது. இந்தப் பேருந்து மன்னர் குடும்பம் உபயோகத்திற்கான தனிச்சொத்து பேருந்து ஆகும்.


.jpg)


கருத்துகள்
கருத்துரையிடுக