முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரிமளம் அரிமழமாகிப் போன அரிமணம்

 புதுக்கோட்டையிலிருந்து பதினெட்டு கல் தூரத்தில் இருக்கிறது, அரிமழம். இவ்வூர் அரிமளம் என்றும் அரிமழம் என்றும் அழைக்கப்படுகிறது. ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார் அரிமலம் என்கிறார். மளம் என்பதற்கு மணம் என்றும் மழம் என்பதற்கு இளமை என்றும் பொருள்.

இவ்வூரார்களிடம் பெயர்க்காரணம் கேட்கையில் அரி என்றால் சிங்கம் என்றும் மழம் என்றால் வீரர்கள் என்றும் சிங்கம் போன்ற வீரர்களைக் கொண்ட மறவர் ஊர் என்று சொல்கிறார்கள். சிங்கத்தைக் குறிக்கும் அரி என்கிற சொல் வடமொழி. தமிழ்ச் சொற்கள் அரி என்பதற்கு நெற்கதிர், வண்டு, கொடு,பகைவன், பாம்பு, அழகு, மரவயிரம், தேர், பரற்கல், பறை,  மூங்கில், குரங்கு, மழைத்தூவல், தவளை, விதை, சிலம்பின் பரல் என்கின்றன. மேலும் அரி என்பதற்கு பனை, பனங்கள், பனங்கருக்கு (சூடாமணி, பிங்கல நிகண்டு), நெல்லுக்கு அரி என்றொரு பெயருண்டு ( பிங்கல நிகண்டு) நெற்கதிரை அறுத்து வரிசையாக வைப்பதற்கு பெயர் அரி. நெற்குவியல் - அரி. கதிர் அறுக்கும் பருவத்தை அரி என்கிறது பெரும்பாணாற்றுப்படை. அதாவது 'அரி புகு பொழுதின் இரியல் போகி'.  இதுதவிர தற்கால அகராதிகள்  அரி என்பதற்கு கள், பனை, அரிசி, குதிரை, கூர்மை, சிங்கம், சூரியன், சந்திரன், பகைவன், திருமால், அரிதல், கண்வரி, கடல், பொன், கிண்கிணிப்பரல் என்கின்றன.

தமிழக ஊர்ப்பெயர்கள் முதலில் நிலம், மண் சார்ந்தும் அதன்பின் மரம், செடி, கொடிகள் கொண்டும் அதற்குப் பிந்தைய ஊர்கள் நீர் நிலைகளைக் கொண்டும் பிறகு மக்கள், குடி சார்ந்து  பெயர்ச்சூட்டப்பட்டு வந்திருக்கின்றன. குடி சார்ந்து பெயர்சூட்டலின் நீட்சிதான் சாதியப் பெயர்கள். அந்த வகையில் அரிமளம் என்பது தொன்மையான ஊர்.

இவ்வூர் குறித்து அகநானூறு, "அரிமண வாயில் உறத்தூர் ஆங்கண் கள்ளுடைப் பெருஞ்சோற்று எல்லிமிழ் அன்ன" என்று பாடியிருக்கிறது. இவ்வூர் ‘எவ்வி’ என்கிற மன்னனுக்குரிய ஊராக இருந்தது. இவன், ‘மாவேள் எவ்வி’ என்று அழைக்கப்பட்டான். பெருங்கொடை வள்ளல். இவன் காவிரி பாயும் மிழலை நாட்டவன். எவ்வி சங்கக் காலத்திய குறுநில மன்னன். பறம்புமலைத் தலைவன் வேள்பாரிக்கு மூத்தவன். இவனது தலைநகர் நீடூர் என்று அழைக்கப்பட்டது. ஆகவே இவன் ‘நீடூர் கிழவன்’ என்று அழைக்கப்பட்டான்.

அரிமண வாயில் உறத்தூர் எனுமிடத்தில் பாண்டியன் படைத் தலைவன் நெடுமிடல் என்பவனைப் போரிட்டு வென்றான். அவன் வென்ற இடம் அரிமண வாயில். இந்த இடத்தில் வெற்றியைக் கொண்டாடும் பொருட்டு தன் படைவீரர்களுக்குக் கள்ளுடன பெருஞ்சோறு அளித்து மகிழ்ச்சி அடைந்தான். பிறகு இதே மன்னன் ‘கொடித்தேர்ச் செழியன்’ எனும் மன்னனிடம் தோற்று நாட்டைப் பறிக்கொடுத்தான்.

எவ்வி விழுப்புண் பட்டு மாண்டுபோன செய்தியை புறநானூறு 233 ஆவது பாடல் பாடுகிறது. எவ்வி மாண்டான் என்கிற செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா, என்கிறது அப்பாடல். இப்பாடலின் தொடர்ச்சியை அகநானூறு 115 பாடுகிறது. எவ்வி போரில் மாண்டான், என்பதை அறிந்த பாணர்கள், தாம் ஊதிப் பிழைக்கும் கொம்புகளை நிலத்தில் எறிந்து துக்கம் கொண்டனர்.

எவ்வி போரில் தோல்விக் கண்டு மாய்ந்துபோனதற்கும் பின்னே புலவரை இகழ்ந்தக் கதையொன்று இருக்கிறது.  கழாத்தலையார் என்றொரு புலவர் இருந்தார். இந்தப் புலவரின் புலமையை எவ்வி இகழ்ந்து நகையாடுகிறார். இதனால் மனமுடைந்த புலவர் எவ்வி மீது சாபக்கவி பாடுகிறார். இந்தச் சாபத்தால் எவ்வி குடியினர் பூண்டோடு அழிந்து போயினர் என்கிறது புறநானூறு 202 ஆவது பாடல்.

       எவ்வி என்பது ஏற்றத்தைக் குறிக்கும் ஒரு சொல்லாக இருக்கிறது. ஏற்றம் என்பது தாழ்வான இடத்திலிருந்து நீரை மேட்டு நிலத்திற்கு ஏற்றுவதாகும். ஆற்றுநீரைப் பள்ளமான இடத்திலிருந்து மேட்டு நிலத்திற்குப் பாய்ச்சுவதற்கு முன்னெடுத்ததால் அவனது பெயரால் ஏற்றம் அழைக்கப்பட்டிருக்கலாம்.       அரிமணம் வாயில் என்பது அரிமணம் என்றாகி பிறகு அது அரிமளம், அரிமழம் என்பதாக திரிந்திருக்கிறது. இங்கு மளம் என்பதும் மணம் என்பதும் ஒன்றுதான். மழம் என்பது இளமை பெயர். “மழமும் குழவும்” இளமைப் பெயர்கள் என்கிறது தொல்காப்பியம். “மறம்புகல் மழ களிறு உறங்கும் நாடன்” என்கிறது அகநானூறு. இங்கு மழம் என்பது  இளமை.

இன்று அரி என்பது சிங்கம் என்றும் மழம் என்பது வீரர்கள் என்றும் பொருள்கொண்டு வீரத்தோடு இவ்வூர் தொடர்புபடுத்துவது உயர்வு நவிற்ச்சி.

அகநானூறு பாடுகின்ற “அரிமண வாயில் உறத்தூர் ஆங்கண் கள்ளுடைப் பெருஞ்சோற்று எல்லிமிழ் அன்ன" என்கிற வரியிலிருந்து அரிமணம் என்பது மணக்கின்ற அரி என்பதாக பொருள்கொள்ள வேண்டும். மூங்கில் அரிசி மற்றும் பனையை அரி என்கிறது சங்க மொழி. அகநானூறு பாடும் கள், பெருஞ்சோறு, எல்லிமிழ் அன்ன என்கிற வரியோடு பார்க்கையில் கள்ளும் சோறும் கலந்த மணம் கொண்ட ஊர் அரிமணம் என்றாகிறது. அரிமணம் அரிமளம் என்றாகி பிறகு அது அரிமழம் என்றாகியிருக்கிறது. புதுக்கோட்டை கல்வெட்டுகள் அரிமழம் என்று குறிப்பிட்டுள்ளன. மேலும் மு.ரா. கந்தசாமிக் கவிராயர், அரிமழத் தலபுராணம் என்றொரு நூல் இயற்றியுள்ளார். அரிமழம் என்பது அரிமளம் என்பதன் திரிபு பெயர்.  

அரிமணம் என்பது அரிமளம் என்றாகி பிறகு அது அரிமழம் என்பதாக திரிந்துள்ளது. இங்கு அரி என்பது பனை மற்றும் மூங்கிலைக் குறிக்கும் சொல்லாகவும் அவை தரும் கள் மற்றும் அரிசியைக் குறிக்கும் சொல்லாகவும் இருக்கிறது.

இக்கட்டுரை தமிழ்நாடு அரசு சொற்ப்பிறப்பியல் அகரமுதலி இயக்ககம் நடத்தும் சொல்வயல் இதழில் வெளியானது. மாதம் ஜூலை -2023








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திர நாள் அன்று தொடங்கப்பட்ட பத்திரிகை

புதுக்கோட்டைச் செய்தி  பத்திரிகையும் சுதந்திர விநாயகரும்                                     @அண்டனூர் சுரா        1947 ஆகஸ்ட் 15,  இந்திய மக்கள் மனதால் நிரம்பப்பெற்ற நாள். ஆம், அன்றுதான் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்நாளை உலகம் முழுமையும் வாழ்ந்த இந்தியர்கள் மகிழ்ச்சி பெருக்கெடுத்து பெரும் விழாவாகக் கொண்டாடினார்கள். தமிழகத்தில் இந்தக் கொண்டாட்டம் எந்த வகையிலும் குறைந்ததாக இல்லை. இந்நாளில் புதுக்கோட்டை தனியரசாக இருந்ததால் இங்கே சுதந்திர தினம் எப்படியாகக் கொண்டாடப்பட்டது, அந்நாளில் நடந்தேறிய விழா நிகழ்வுகள் என்ன, சமஸ்தான அரசு இந்தச் சுதந்திரத்தை எப்படியாக எதிர்கொண்டது, இந்நாளை மன்னர் கொண்டாடினாரா என்கிற கேள்விகள் நீண்ட காலமாக மக்களிடம் இருந்து வருகின்றன. இக்கேள்விக்குப் ”புதுக்கோட்டை செய்தி” எனும் மாத இதழ் பதில் சொல்கிறது. புதுக்கோட்டைச் செய்தி இந்திய சுதந்திர நாளைக்  கொண்டாடும்பொருட்டு புதுக்கோட்டை சமஸ்தானம் ‘புதுக்கோட்டைச் செய...

புதுக்கோட்டை சாதிவாரி கணக்கெடுப்பு

உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு இஸ்ரேல் நாட்டில் எடுக்கப்பட்டது. இது மக்களின் கணக்கெடுப்பாக இல்லாமல் போர்ப்படை வீரர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதாக இருந்தது. இஸ்ரேல், ஜூடாக் என இரு நாட்டினர்களுக்கு இடையேயான் போரில்   டேவிட் மன்னனைச் சாத்தான் மன்னன் தோற்கடித்தான். இப்போருக்குப் பிறகு இரு தரப்பிலும் எவ்வளவு பேர் உயிருடன் இருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டது. வீரர்களை வரிசையாக நிறுத்தி கணக்கெடுத்தார்கள். வீரர்கள் வாளை வானோக்கி உயர்த்தி உறைக்குள் சொருக வேண்டும். அப்படியாக செய்தால் மட்டும்தான் வீரர் உயிருடன் இருக்கிறார் என்று பொருள். இந்தக் கணக்கெடுப்புப் பணி ஒன்பது மாதங்கள் இருபது நாட்கள் நடைபெற்றது. முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு பாபிலோனியாவில் எடுக்கப்பட்டது. கி.மு 3 ஆம் நூற்றாண்டில்   விவசாயம், கடினத் தொழில்கள் மற்றும் இன்னும் பிற வேலைக்காக இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெர்சியன் பேரரசு,   சீனா, எகிப்திய பேரரசுகள் மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தியது. ரோமன் பேரரசு மன்னன் சர்வியஸ் டூலியஸ் என்பவன் கி.மு ஐந்தா...

உலகப் போர்களில் புதுக்கோட்டை @அண்டனூர் சுரா

உலகப் போரைத் தொடங்கி வைத்த பெருமையும் சிறுமையும் மன்னர் குடும்பத்தைச் சாரும்! ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசன் பிரான்சிஸ் பெர்டினாந்த் அவருடைய மனைவியுடன் காரில் செல்லும்பொழுது இளவரசன் செர்பியா நாட்டைச் சேர்ந்த ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த படுகொலை நடந்தேறிய நாள் ஜுன் 28, 1914. இதன் காரணமாக ஆஸ்திரியா செர்பியா மீது படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையிலிருந்த ஜெர்மனி ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக படையெடுத்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா நாடுகள் ஜெர்மனியுடன் இணைந்துகொண்டன. செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா நாடுகள் சேர்ந்துகொண்டன.        உலகில் சூரியன் மறையாத நாடு என்று பெயர்பெற்றிருந்த பிரிட்டன் தன் நாட்டைக் காப்பாற்றிக் கொள்வதோடு அதன் காலனி நாடுகளையும் காப்பாற்றியாகவேண்டிய நெருக்கடிக்கு உள்ளானது. ஆகவே இந்திய மாகாண உதவியையும் சமஸ்தான மன்னர்களின் உதவியையும் நாடியது. பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிப் பகுதியிலிருந்த இளைஞர்கள் பிரிட்டிஷ் படையில் சேர ஆர்வம் காட்டினார்கள். சமஸ்தான அரசுகள் நிதிஉதவி செய்தார்கள். அப்படியாக நிதி உதவ...